இந்த செய்தியை கீழே உள்ள Share பட்டன் மூலம் பகிருங்கள்>>>
செய்திகளை  உடனுக்குடன்  அறிந்துகொள்ள  அழுத்துங்கள் கீழேயுள்ள Like பட்டனை ...
Loading...
Copy

மறிச்சுக்கட்டியிலிருந்து ஒரு அபலையின் குரல்.

அதி மேதகு அவர்களுக்கு,
எனது கண்ணீரை யாரோ கடிதமாக்குகிறான்


ஐயா,
இது இரவு நாங்கள் தூங்கி எழும்பிய கூடு!
இதுதான் எங்களது வீடு.....
இதுதான் எங்களது பூர்வீக பூமி...!

நான் பிறந்தது
எனது மகளை கருவாக சுமந்தது
எல்லாம் இந்த புழுதி மணலில்தான் ஐயா!
இருபத்தாறு ஆண்டுகளுக்கு முன்னே
நிறைமாத கர்ப்பிணியாக எனது மகளை
சுமந்த படி இந்த மண்ணில் இருந்துதான் விரட்டப்பட்டேன் ஐயா!

சத்தியமாக இந்த மண்ணை விட்டுத்தான்
விரட்டப்பட்டேன் ஐயா!

அன்று எங்கள் வேகமான கால்தடங்கள் பட்டு
எழுந்த புழுதி மணம் இருக்கிறதே
அது எனது நாசித்துவாரத்திற்குள் இப்போதும் மணக்கிறது ஐயா!
அதே புழுதியை இன்னும் பிரசவிக்கும்
இந்த பூமிக்கு திரும்பி வந்து
எங்கள் வேர்களை தேடும் போது
விரல்களை தறித்துவிட நீங்கள்
வாள்களை அனுப்பியது ஏன் ஐயா?

புலி துரத்திய போது
நான் சுமந்து கொண்டு ஓடிவந்த மகள்
இப்போது கருச்சுமந்து நிற்கிறாள்!
அதை இறக்கி வைக்க
என் பேரப்பிள்ளை தவழ்ந்து மகிழ
இந்த பூமி வேண்டும் ஐயா?

ஐயா
இது நாங்கள் இரவு தூங்கிய வீடு
விடிந்ததும் உங்கள் பாஷையில்
இதை காடென்று எழுதி முடித்து விட்டதாக
சொல்கிறார்களே!
உண்மைதானே?

ஒரு மிருகசாதிக்கு கொடுக்கிற மரியாதையின்
மயிரழவு கூட இந்த மனித ஜாதிக்கு கொடுக்கவொண்ணாமல் உங்களது மூளைக்கு நஞ்சூட்டியது யார் ஐயா?

ஒரு பொழுது விடிவதற்குள் எங்கள் வீடுகள் எல்லாம்
காடுகள் ஆன சாசனத்தை எழுதுவதற்கு
உங்களுக்கு எழுதுகோல் எடுத்துக்கொடுத்தது யார் ஐயா?
நானும், அவரும், மகளும்
உங்களை நாட்டுக்கு ராசாவாக்க
கையில் பூசிக்கொண்ட
வாக்கு மையின் வாசம் தீர முன்னே
என் இனத்திற்கு நீங்கள் தந்த வாக்கினை
மாற்றச்சொன்னது யார் ஐயா?

பகலோடு பகலாக அவர்கள்
ஆயுத முனையில்
எம்மைத்துரத்தினார்கள்
நீங்கள்
இரவோடு இரவாக
அதிகார முனையில்
எம்மை இரண்டாம் முறையும்
அகதிகளாக ஆக்கிவிட்டீரே ஐயா!

உங்கள் பிரகடனத்தால் இனி
எனது வீடு நாய்களின் கூடாகும்
எனது பள்ளியில் விலங்குகள் தொழும்
எனது பாதையில் எருமைகள் நடனமாடும்.
விலங்குகளுக்கு வீடுகளை
எழுதிக்கொடுத்து விட்டு
எங்களுக்கு விலங்கிடப்பார்க்கும்
பெருந்தேசியவாத எட்டப்பர்களின் மகுடிக்கு ஆடுகிற சர்ப்பமாக நீங்களும் மாறிப்போவீர் என நாம் கனவிலும் எண்ணவில்லை ஐயா!

நானும் அவரும் மகளும் கருவும்
நாதியற்று செத்து மடிவோமென நினைத்தீரோ ஐயா!
ஒருபோதும் மாட்டோம்!
நான் சுமந்து வந்த கரு
சுமந்து நிற்கும் கரு
இந்த பூர்வீக பூமியில் விழுந்து வளரும் வரை
நான் ஓயமாட்டேன் ஐயா!

நாம் விதைகளாய் வீழ்ந்தாலும் எம் தலைமுறை தளைக்கும்!
இது எனது வேர் விழுந்த பூமி
எங்கள் பாட்டன் முப்பாட்டனின் எலும்புகள்
உக்கி உரமாகி அதில் வளர்ந்த மரங்கள்
வாழும் பூமி!

இந்த மரங்களின் காற்றுத்தான்
எங்கள் சுவாசம்.

நாங்கள் எங்கள் வேர்களை சுவாசித்துக்கொண்டிருக்கிறோம்!
கொள்ளி பொறுக்கி விற்று
குருதியால் வியர்வை ஊற்றி
சில்லறை சேர்த்து கட்டிய கொட்டில்....
இதுதான் எங்கள் வீடு....

இதை நீங்கள் இனியும் காடென்றால்
உங்களையும் உங்கள் அரசையும்
எங்களை வைத்து வயிறு பிழைக்கும்
எமது இனத்தின் எட்டப்பர்களையும்
என் கண்ணீர் கடுமையாய்
சுட்டுப்பொசுக்க கடவட்டும்!

- முஜீப் இப்ராஹீம் -
Labels:

கருத்துரையிடுக

[blogger]

Author Name

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.